31 ஆகஸ்ட் 2012

காஷ்மீரில் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் காவல்துறையும்,ராணுவமும்


காஷ்மீரில்  நடக்கும் பிரச்சினைகளை  வெறும் பார்வையாளனாக  கடந்து  செல்வோர்தான்  நம்மில் பெரும்பாலோர்.....

காஷ்மீர்  பிரச்சினை எப்போதும் இந்தியா பாகிஸ்தான்  பிரச்சினையாக மட்டுமே ஊடகங்களால்  எழுதப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது....அங்கு மக்கள் படும் துன்பங்களை  யாரும் கண்டு கொள்வதில்லை....
பொதுமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக  சித்தரிக்கும்  போலீஸ்  அவர்களை தீவிரவாதிகளாக  உருவாக்கியே தீர்வதில் முழு மனதுடன் செயல்பட்டு வருகிறது  ....

காஸ்மீர் மக்கள் ஒரு பக்கம் தீவிரவாதிகளாலும்  ஒரு பக்கம் இந்திய ராணுவம் மற்றும்  போலிசாலும்  பெரும் துயரத்துக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி  வருகின்றனர்....

அங்கு பெண்களக்கு பாதுகாப்பு இல்லை....சிறுவர்களுக்கு  பாதுகாப்பு இல்லை....
இந்த சிறுவனை  பாருங்கள்....பைசான் பசிர் சோபி  என்ற  இந்த 12 வயது சிறுவனை கைது செய்துள்ளது போலீஸ்....
இவன் மீது தீ வைப்பு, கொலை முயற்சி,மற்றும் நாட்டிற்கு எதிராக  போர்  தொடுத்தல்  போன்ற பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

இவனுடன் மேலும் நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது  ஜாமீனில்  வெளியே விடப்பட்டுள்ளனர்....
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா  இவர்களுக்கு ?

இந்த சிறுவனா  நாட்டிற்கு எதிராக போர்  தொடுக்க போகிறான்?

விளையாட்டு துப்பாக்கி வைத்து விளையாடும் வயதுள்ள இவனா  துப்பாக்கி தூக்கி  கொலை செய்ய போகிறான்...?
நெருப்பை கண்டு பயப்படும் வயதுள்ள இவனா தீவைத்து  கொளுத்த  போகிறான்?

ஜெயிலுக்கு சென்று  வந்த அவனின் மனநிலை எப்படி இருக்கும்? செய்யாத தவறுக்கு கைது செய்யப்பட்டுள்ள அவனுக்கு நாளடைவில் இதை செய்தால் என்ன என்ற மனநிலை  உருவாவதற்கு யார் காரணம்?

 அப்பாவி மக்களை மூளை சலவை செய்ய வலைவீசி காத்திருக்கும் தீவிரவாதிகளின்  கண்களில்  இந்த சிறுவர்கள் சிக்குவதற்கு யார் காரணம்?

போலீசா?ராணுவமா?அரசாங்கமா?இல்லை ஏதுமறியாத  இந்த சிறுவர்களா?


30 ஆகஸ்ட் 2012

32 பேர் குற்றவாளி...ஆனால் கேடி மோடிக்கு எப்போது தண்டனை?


குஜராத்தில் 2002 ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான  வழக்கில் நேற்று அகமதாபாத்  சிறப்பு நீதிமன்றம்  32 பேர் குற்றவாளிகள்  என தீர்ப்பு அளித்துள்ளது....

 அதே சமயம்  29 பேர்  விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர்... குஜராத்தில் 2002 ம் ஆண்டு நடந்த கலவரத்தில் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.அந்த வழக்கில்தான் தற்போது  தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது...

 குஜராத்  கலவரங்கள்  தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன....அவற்றுள் ஒன்றுதான் நரோடா பாடியா  படுகொலை வழக்கு ....இந்த சம்பவம் நடந்த அன்று விஸ்வ இந்து பரிசத் முழு அடைப்பு நடத்தி இந்த படுகொலைகளை  அரங்கேற்றியது....இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக கணக்கில் சொல்லப்பட்டது  97 பேர் மட்டும்தான்....கணக்கில்லாமல்  எத்தனையோ?

 குற்றவாளிகளில் முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி ஆகியோர் முக்கியமானவர்கள்....மாயா கோத்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார்  ...இந்த கோத்னானி அன்று  குஜராத்தில் முதலமைச்சர்  என்ற பெயரில் முதல் கொலைகாரனாக  இருந்த மோடியின் நெருங்கிய கூட்டாளி ......

ஏவப்பட்டவர்களுக்கு  தண்டனை கிடைத்து இருக்கிறது....ஆனால் கலவரத்தை கட்டுபடுத்தாமல் தூண்டிவிட்டு மனித உயிர்களை வேட்டை ஆடிய ரத்த காட்டேரி  மோடிக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?.....

நீதி தாமதமாக இருந்தாலும் கிடைத்து இருக்கிறது.....ஆனால் முழுதும் நீதி கிடைக்காது...என்று மோடி தண்டிக்க படுகிறாரோ  அன்றுதான்  நீதி மன்றங்கள்  முழு உயிர்ப்புடன் இந்தியாவில் இயங்குகிறது என்று அர்த்தம்....



இந்த செய்தியை தினத்தந்தியில் படித்துவிட்டேன்...ஆனால் மோடிக்கு பல்லக்கு தூக்கும்  தினமலரில்தான்  இப்பவரைக்கும் இது தொடர்பான செய்திகளை காணவே இல்லை...தினமலரிடம் இதை எதிர்பார்ப்பது தவறுதான் என்றாலும் அவர்கள் ஒருவேளை இந்த செய்தியை வெளியிட்டாலும் குஜராத் கலவர  வழக்கில் 29 பேர் விடுதலை என்றுதான் தலைப்பாக  வரும்....


தினமலரின் இந்த இருட்டடிப்பு  வக்கிரத்துக்கு  என்றுதான் முடிவோ?




29 ஆகஸ்ட் 2012

பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் ...அடடா ஒரு !

 பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத  குறையை அன்றைய நேரடி  ஒளிபரப்பும் ,அதை தொடர்ந்து வந்த, வந்து கொண்டு இருக்கும் நண்பர்களின் பதிவும் போக்கி   கொண்டு இருக்கிறது....

பதிவர் சந்திப்பில் சிறப்புரை ஆற்றிய எழுத்துலக சக்கரவர்த்தி பி கே பி சாரின் உரையும்  பதிவர் சந்திப்புக்கு முன்னாடி நான் எழுதிய பதிவும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருந்தது (அதாங்க சினிமா பாணியில் வேவ்ஸ் என்பார்களே ) எனக்கு ஆச்சர்யம்....!! அண்ணன் "வீடு திரும்பல்"மோகன் குமாரின் பதிவில் பி கே பி பேசியதாக  நான் படித்ததையும்  எனது பதிவில் நான் எழுதியதையும் பதிவிட்டுள்ளேன்...

 பி கே பி சார் பேசியது..

வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !

 இது நான் சொன்னது...(

சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!(http://nkshajamydeen.blogspot.com/2012/08/blog-post_23.html)



 நாளடைவில் பதிவுலகம் மிகப்பெரிய ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை..எனவே புதிதாக வரும் பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் நாம் அறிந்த தெரிந்த எழுத்து திறமையும் ,பேச்சு திறமையும் கொண்ட மாணவர்களையும் பதிவுலகில் இணைத்திட முயற்சி செய்யலாம் என முடிவெடுக்கலாம்...

இது சார் சொன்னது...

Unparliamentary வார்த்தைகள்/ விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !


இது நான் எழுதியது....


சினிமா விமர்சனங்களை பதிவிடும் பதிவர்கள் கவர்ச்சி படங்களை அதில் தவிர்த்தல் நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து ..அதை இந்த மாநாட்டில் வலியுறுத்தலாம்....

இதுவும் சார் சொன்னது.....

 சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள்.


இதுவும் நான் எழுதியது....

 இறுதியாக பதிவுலகில் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் ,சக பதிவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட வேண்டாம் என ஒரு தீர்மானமே போடலாம்...

இதற்கு  பெயர்தான் டெலிபதியோ!

இறுதி டச் :பி  கே பி  சாரின்  பேச்சோடு  எனது கருத்துக்களும்  ஒத்து இருந்ததை குறிப்பிடவே இந்த பதிவு...



25 ஆகஸ்ட் 2012

மதுவும்,புலாலும், ........பூசப்பட்ட மத சாயமும் ஒரு விளக்கமும்...

மது அருந்துவது  ஒரு சமுதாய  தீமை என்பது அனைவராலும்  ஏற்று கொள்ளப்பட்ட  ஒரு விஷயம்...

ஆனால் புலால் (அசைவம்) உண்பது  ஒரு சமுதாய  தீமை என்று சொன்னால் சிறு குழந்தை கூட கைகொட்டி சிரிக்கும்....

மது அருந்துபவர்கள்  தன்னிலை மறந்து பொது இடங்களில் கூட அநாகரிகமாக நடந்து கொள்வது அன்றாடம் நாம் காணும் கண்காட்சி...

அசைவம் உண்டதாலே ஒருவர் பொது இடத்தில  தன்னிலை மறந்து அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று எங்கேயாவது கேள்வி பட்டது உண்டா?

மது  அருந்துபவர்கள் அந்த போதையால் கொலை,கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனபது அன்றாடம் செய்திதாள்களில்  பார்த்து பார்த்து புளித்துப்போன ஒரு செய்தி


ஆனால் புலால் உண்பதால்  போதை தலைக்கேறி  யாரேனும் தீய செயல்களில் ஈடுபட்டார்கள் என்று  என்றாவது படித்து இருக்கிறோமா?

மது அருந்துவதால்  அதை குடிப்பவர்களின் உடலுக்கு தீங்கு விளைவித்து மரணம் வரை அழைத்து செல்லும் என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை....


ஆனால் புலால் உண்பதால் அது மரணம் வரை அழைத்து செல்லும் என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை...


இது எல்லாவற்றையும்  விட மதுவினால் அதை குடிப்பவரின்  குடும்பமே சீரழிகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை...

ஆனால் அசைவம்  உண்பதாலே எந்த குடும்பமாவது சீரழிந்து  பார்த்தது உண்டா?

இப்படி மது அருந்துவதற்கும்,புலால் உண்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும் நிலையில் இது இரண்டையும் முடிச்சு போட்டு மது அருந்தாதே என சொல்பவர்கள் புலால்  உண்ணாமல் இருப்பார்களா என அவசியமில்லாத  கேள்வியை எழுப்பியுள்ளார் சக பதிவர் ஒருவர் ...


அவரது கூற்றுப்படி ஒரு உயிரை கொன்று உண்பது  தீமை என்றால் நாம் யாரும் இங்கு உணவே உண்ண  முடியாது....ஏனெனில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு  என அறிவியல் கூறுகிறது....அப்படி என்றால்  தாவரங்களை கொன்று சாப்பிடுவதும் தவறுதானே ?

மது அருந்துவது தவறு என பதிவுலகில் சக  நண்பர்கள்  பதிவிட்டால் அதற்கும் மத சாயம்  பூசி மது குடிப்பது தவறு என்றால் புலால் உண்பதும் தவறு என விதண்டாவாதம் செய்வது வீணான  செயலே...

 அவரின் பதிவில் இவ்வளவு பெரிய பின்னூட்டமிடுவதை விட  ஒரு பதிவே போட்டு விடலாம்  என்பதாலே பதிவிட்டுள்ளேன்....

மற்றபடி  இது  எந்த மதத்தையும் ஆதரித்தோ ,எதிர்த்தோ எழுதப்பட்ட பதிவு அல்ல....மதுவை மட்டுமே  எதிர்த்து எழுதப்பட்ட பதிவு..

 மது அரக்கனை ஒழிப்போம்....மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்....

24 ஆகஸ்ட் 2012

சென்னை பதிவர் சந்திப்பில் கருணாநிதி!


நடக்கவிருக்கும் சென்னை பதிவர் சந்திப்பில் கலைஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்....

இருங்க நண்பர்களே....அப்படி அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றினால் எப்படி இருக்கும்....அவரின் கற்பனை பேச்சுக்கு போனசாக எனது கற்பனை கமெண்டும் உண்டு....!


எனதருமை உடன்பிறப்புகளே (இது என்ன கட்சி மாநாடா!).....வலையுலகில் புலி போல் பாயும் புலிகளே....நான் விடுதலைபுலிகளை சொல்லவில்லை.(இவருக்கு நாக்கில்தான் சனி போல)...இந்த எழுத்தினால் நான் பெற்ற புகழ் இந்த வையகம் அறிந்ததே ....அதை போல எழுத்தில் என் பாணியை பின் பற்றி நீங்களும் புகழ் பெற வேண்டும்...(பதிவர்களில் பாதி பேரு காதில் பஞ்சு வைத்து கொள்ள துவங்குகின்றனர்)

இப்போது ஜெயலலிதா அவரை விமர்சிக்கும் அனைவரின் மீதும் வழக்குகள் போட்டுள்ளார்...இம்மாதிரி வழக்குகள் நாளை பதிவர்களான உங்கள் மீதும் பாயலாம்...எனவே பதிவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து எழுத்து பணியோடு மக்கள் பணியும் சேர்ந்து ஆற்ற அழைக்கிறேன்...(இப்போது முழு பதிவர்களும் காதில் பஞ்சோடு)


நீங்கள் எல்லாம் பதிவுலகில் ஒற்றுமையாக ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் (தலைவரே முதலில் உங்க வாரிசுகளை ஒற்றுமையா செயல்பட சொல்லுங்க )......சமுகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும்...(நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்க செய்வோம் தலைவரே ).....எதிர்வரும் காலங்களில் திமுக ஆட்சி அமைகின்ற நேரத்தில் எனக்கு பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா எதுவும் நடத்த வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்....(உங்க அகராதியில் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமாமே !)


இப்போது இணையதளங்களில் என்னைய மட்டும்தான் அதிகமாக கஞ்சி காய்ச்சி வருகின்றனர் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருய்யா.)..அதனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை...ஏனென்றால் காய்த்த மரம்தான் கல்லடிபடும்...(யாரும் உங்களை கல்லால அடிக்கலையே ...சொல்லால தானே அடிக்கிறார்கள் !)


நீங்களெல்லாம் ஈழத்துக்காக போராடும் என் போர்குணத்தை பற்றி அறிவீர்கள்....அதுபோல போர்குணம் உங்களுக்கும் இருக்க வேண்டும்(அச்சச்சோ ..வேணாம் அய்யா வேணாம் உங்க போர்குணம்..)ஈழம் வேண்டும் என்று நான் சொல்லவில்லை...அதே சமயம் ஈழம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை!மொத்தத்தில் நான் சொல்வது யாருக்கும் சரியாக புரிவதில்லை...(முதலில் உங்களுக்காவது புரியுதா தலைவரே !)

இறுதியாக ஒன்று இந்த பதிவர் மாநாடு ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துக்கொண்டு எனது உரையை முடித்துகொள்கிறேன்...(தலைவர் உரையை முடிக்கும் முன்பே மைக் அனைக்கப்படுகிறது..பதிவர்கள் காதிலிருந்து பஞ்சை தூக்கி எறிகிறார்கள்)




23 ஆகஸ்ட் 2012

சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!


நடக்கவிருக்கும் சென்னை பதிவர் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நானும் ஒரு பதிவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

அதே சமயம் இதில் கலந்துகொள்ள ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருந்தாலும் நான் மலேசியாவில் இருப்பதால் இயலாது என்பதால் சிறு வருத்தம் எனக்கு...

ஓகே....மேட்டருக்கு வருவோம்....

அடிக்கடி அங்கங்கே நடக்கும் பதிவர் சந்திப்புகள் இப்போது பதிவர் மாநாடாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது பதிவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விசயமாகவே இருக்கும்...

இந்த பதிவர் மாநாட்டினால் இதுமாதிரி நன்மைகள் கிடைத்தால் நல்லது என ஒரு பதிவர் என்ற முறையில் எனக்கு நானே ஒரு பட்டியலிட்டுள்ளேன்...

பதிவர்களாகிய நம்மில் பெரும்பாலோர் பெரும்பாலும் சினிமாவை பற்றியும்,அரசியலை பற்றியும்தான் பதிவிடுகிறார்கள்...சினிமா விமர்சனங்களை பதிவிடும் பதிவர்கள் கவர்ச்சி படங்களை அதில் தவிர்த்தல் நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து ..அதை இந்த மாநாட்டில் வலியுறுத்தலாம்....

அரசியல்வாதிகளை ,சமுக அவலங்களை விமர்சனம் செய்யும் நாம் நம்முடைய பழக்கவழக்கங்களை பிறர் விமர்சனம் செய்யாத அளவுக்கு ஒரு முன்மாதிரியாக வைத்து இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துகொள்ளலாம்..(அதாவது யாருக்கும் எந்த விசயத்துக்காகவும் லஞ்சம் கொடுக்காமல்இருத்தல், சாலை விதிகளை மதித்தல், எல்லாவற்றிலும் உண்மையாக இருத்தல் போன்றவைகள்)

குடியை கெடுக்கும் "குடியை" ஒழித்திட,குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்...

பத்திரிக்கைகள் மீது வழக்குகள் போடுவதை இப்போது ஜெயலலிதா ஒரு காலைகடனாக வைத்துள்ளார்..நாளடைவில் இது மாதிரி வழக்குகள் பதிவர்கள் மீதும் பாயலாம்...எனவே பதிவர்களுக்காக ஒரு அமைப்போ ,சங்கமோ உருவாக்கலாம்...

நாளடைவில் பதிவுலகம் மிகப்பெரிய ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை..எனவே புதிதாக வரும் பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் நாம் அறிந்த தெரிந்த எழுத்து திறமையும் ,பேச்சு திறமையும் கொண்ட மாணவர்களையும் பதிவுலகில் இணைத்திட முயற்சி செய்யலாம் என முடிவெடுக்கலாம்...

இறுதியாக பதிவுலகில் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் ,சக பதிவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட வேண்டாம் என ஒரு தீர்மானமே போடலாம்...

என் மனதில் உள்ள இந்த கருத்துக்களை சென்னை பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி எனக்கு.!சென்னை பதிவர் சந்திப்பின் மூலம் இதெல்லாம் லாபமாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்...

சென்னை பதிவர் சந்திப்பு நோ நோ மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

17 ஆகஸ்ட் 2012

காணாமல் போனவர்கள் (கிராமராஜன்)


கதாநாயகி மட்டும்தான் உதட்டு சாயம் பூச வேண்டுமா என வெகுண்டு எழுந்து உதட்டு சாயம் பூசி நடித்தவர் நம்ம ஆளு......


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆளாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் முன்னுக்கு வந்து அவரது நடிப்பால் ரசிகர்களின் தலையை பிய்க்க வைத்தவர்.....


பென்சிலால் மீசையும் வரைந்து நடிக்க முடியும் என நடிப்புக்கு புது இலக்கணம் வகுத்தவர்.....


கதாநாயகன் என்றால் பந்தயத்தில் மாட்டை அடக்க வேண்டும் என்ற விதிமுறையை உடைத்து பாட்டு பாடியே மாட்டை அடக்கியவர்......யாருன்னு தெரியுதா?


வேற யாரு நம்ம ட்ரவுசர் பாண்டி ராமராஜன் தான்.....

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இவரின் கால்ஷீட் கிடைப்பது என்பது அன்றைய தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு இப்ப மின்சாரம் கிடைப்பது மாதிரி...சார் அவ்வளவு பிஸி.........


இவரின் கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.....ஒரு காலத்தில் ராமராஜன் நடித்து இளையராஜா இசைஅமைத்து எதாவது ஒரு ராசான்னு படத்துக்கு பேரு வச்சால் படம் நூறு நாள்தான்.....


சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியலிலும் கால் பதித்து நாடாளுமன்றம் வரை சென்று வந்தவர் நம்ம ஆளு ...அங்கே அவரு வேற ஒண்ணுமே செய்யல....அது வேற விஷயம்....அவரே இப்ப தன்னுடைய வாழ்வை திரும்பி பார்த்தாலும் தான் எம் பி ஆனதை இன்றும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடுதான் பார்ப்பார்...


ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்ததால் சாரின் படங்கள் வரிசையாக ஊத்தி கொண்டன,அவரது மனைவியும் விவாகரத்து பெற்றார்.....கட்சியிலும் செல்வாக்கு இல்லை....அதிமுக வில் வெறும் ஊறுகாயாக மட்டுமே இவர் பயன்படுத்தப்பட்டார் ....

இனி அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருண்ட காலம்தான்.....ஏனென்றால் இப்போது சீனில் உள்ளவர்களையே ஜெ அலேக்காக பந்தாடி கொண்டு இருக்கிறார்..

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வைராக்கியமாக இருக்கிறார் நம்ம ஆளு....வேறு குணசித்திர வேடங்கள் குடுத்தால் இவருக்கு நடிக்கவே வராது என்பது வேறு விஷயம்....


காலத்தின் மாற்றத்தால் குணசித்திர வேடங்களில் நடிக்கும் பல முன்னாள் ஹீரோக்களை போல இவர் நடிக்காமல் அடம் பிடித்ததால் நிரந்தரமாக இப்போது காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்ந்துள்ளார் நம்ம கிராமராஜன்....

நீதிகதையின் முடிவில் ஒரு நீதி இருப்பதுபோல இந்த பதிவில் உள்ள ஒரு நீதி...காலத்துக்கு ஏற்ப மாறி கொண்டே இருக்கவேண்டும்...!

ஹிண்ட்ஸ் ...இது ஒரு தோண்டி எடுக்கப்பட்ட என்னுடைய பழைய பதிவு....

16 ஆகஸ்ட் 2012

ஆண்களே ...பிரசவத்தை நேரில் பாருங்கள்...தாய்மையின் மகத்துவத்தை உணருங்கள்...!


பிரசவம் என்றால் அது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள்....அது எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

நம் தாய் நம்மை எவ்வளவு வலி வேதனைகளை பொறுத்துக்கொண்டு பெற்றெடுத்தாள் என புரிந்து கொள்ள வேண்டுமா?

நம் மனைவி நமது வாரிசை பெற்றெடுக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறாள் என அறிந்து கொள்ள வேண்டுமா?

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகளினால் சொன்னால் புரியாது....நம்மை பெற்றெடுத்த தாயின் அருமையை, நம் வாரிசை பெற்றெடுத்த மனைவியின் அருமையை வெறும் வார்த்தைகளினால் அளவிடுவதும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை முழுதாக எண்ணுவதும் ஒன்றுதான்..!


நமது நாட்டில் பிரசவம் என்றால் அது சுக பிரசவம் என்றாலும் சரி,சிசேரியன் ஆனாலும் சரி நாம் யாரும் பிரசவம் நடக்கும் அறையினுல் எட்டி கூட பார்க்க முடியாது...சும்மா வெறுமனே கையை கட்டிக்கொண்டு வெளியே நிற்போம்...சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து உங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்வார்...நாம் ஆனந்தம் அடைவோம்..அதோடு சரி...

ஆனால் மலேசியாவில் சுகபிரசவம் என்றாலும்,சிசேரியன் என்றாலும் அந்த பெண்ணின் கணவன் உடன் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது...கிட்டத்தட்ட கட்டாயம் என்று கூட சொல்லலாம்...அப்போது அப்பெண் படும் வேதனையை கண்ணால் கண்ட அவள் கணவன் பின் எப்போது அவளை மறக்கவோ,வெறுக்கவோ முடியும்....

பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனையை உடனிருந்து பார்க்கும் ஒருவன் பின் எப்படி தன் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட முடியும்?

அதனால்தான் மலேசியாவில் பிரசவத்தின்போது கணவன் கூட இருப்பது கட்டாயம்...அது போல நம் நாட்டில் அனுமதித்தால் நிச்சயம் விவாகரத்துகளும், முதியோர் இல்லங்களும் குறையும்...

சென்ற வாரம் என் மனைவிக்கு மலேசியாவில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது....அப்போது என் மனைவியுடன் நான் உடனிருந்தேன்...என் குழந்தையை டாக்டர் வெளியே எடுக்கும்போது நான் பார்த்த அந்த உணர்வை விவரிக்க வார்த்தை இல்லை...


நம் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைகளை மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்....ஆனால் அது சாத்தியமா ?!

தெரியவில்லை..................நமது பணத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நம்மை வெளியே நிற்க சொல்வது முரண்பாடாக இல்லை...!

பிரசவத்தை நேரில் பார்க்கும் எந்த ஆணுக்கும் நிச்சயம் தன் தாயின் மீதும்,மனைவியின் மீதும் மதிப்பும் பரிவும் கூடுவது ஆயிரம் சதவீதம் உண்மை என்றால் அது மிகையல்ல....


15 ஆகஸ்ட் 2012

ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டாரா ஆச்சார்யா?!ராஜினாமாவின் ரகசியம் என்ன?


தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் ’....இது இன்று கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா பேசிய பேச்சு....

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு....ஆனால் அதெல்லாம் பிறருக்குத்தான் போல...

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை எவ்வளவு தூரம் தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்தி வந்தார் ...வருகிறார்....மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன் ஜெயலலிதாவுக்கு....

மாஜி சினிமா நடிகை என்பதாலோ என்னவோ சினிமாவில் வருவது போல அதிரடி காட்சிகளை சொத்து குவிப்புவழக்கில் நடைமுறைப்படுத்தினார்..முதலில் இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் நியமனம் செல்லாது என வழக்கு போட்டு குட்டு வாங்கி கொண்டார்....

இப்போது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த வக்கீலையே ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்...

கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மாநில உள்துறை செயலருக்கு அனுப்பியுள்ளார் ...மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித மிரட்டலும் இல்லாமல் ராஜினாமா செய்வாரா அவர்?


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாவை கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றமே சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர்.

அதே நேரத்தில் கர்நாடக ஆளும் பாஜகவின் துணையோடு ஆச்சார்யாவை அரசு தலைமை வழக்கறிஞராக்கியும் அகற்றப் பார்த்தனர். ஆனால் ஆச்சார்யா அந்தப் பதவியை ராஜினாம செய்துவிட்டு தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்....

இந்த வழக்கிற்காக வந்த பதவியையும் வேண்டாம் என்ற ஆச்சார்யா இப்போது ராஜினாமா செய்வதன் மர்மம் ஏதோ ஒரு வகையில் அவர் மிரட்டப்பட்டதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனே ஒய்வு பெற்றுள்ளநிலையில் இப்போது இவரும் காலி....இனி இந்த வழக்கும் காலி....

ஆட்சியும்,அதிகாரமும் இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்...அதுவும் சுதந்திர தின நாளிலே..!வாழ்க தனி மனித சுதந்திரம்..!!



09 ஆகஸ்ட் 2012

ஆனந்த விகடனில் அதிரடி...














எவர் ஒருவருடைய ஆக்கம் குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே சென்று அடைகிறதோ அதுதான் ஆவருக்கு கிடைத்த பரிபூரண வெற்றி....(ஹி ஹி ...புதுசா ஒரு வசனம் ட்ரை பண்ணினேன்....

நேற்று என் நண்பனின் மனைவிக்கு பிரசவம்..மருத்துவமனையில் என் நண்பனுடன் இருந்தேன்....அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது....அந்த சந்தோசமான நேரத்தில் அண்ணன் கஸாலி தொலைபேசியில் அழைத்து ஆனந்த விகடன் வலையோசை திருச்சி பதிப்பில் இந்த வாரம் எனது வலைப்பூ இடம் பெற்று இருக்கும் சந்தோசமான செய்தியை சொன்னார்...

பதிவுலகில் மிதக்கும் பல பிரமாண்ட கப்பல்களுக்கு இடையே ஒரு சிறு கப்பலான என்னை ஆனந்த விகடன் தனது கடல் போன்ற வாசகர் வட்டத்தில் இந்த வார என் விகடனில் மிதக்கவிட்டுள்ளது....இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்....ஆனந்த விகடனுக்கு நன்றி....

பதிவுலகில் நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்தவர் அண்ணன் கஸாலி....எனது வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை சரி செய்ய உதவி செய்து என் விகடனில் என் வலைப்பூ இடம்பெற உறுதுணையாக இருந்த கஸாலி அண்ணனுக்கு என் நன்றிகள்...

நான் மலேசியாவில் இருப்பதால் என் விகடன் சரியாக விகடனுடன் இணைந்து கிடைப்பதில்லை...

எனது வலைப்பூ இடம்பெற்ற பகுதியை ஸ்கேன் செய்து அனுப்பிய
மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் என் நன்றிகள்....

மேலும் என் பதிவுகளை படித்து தினமும் கருத்துரை இட்டு ஓட்டளித்து என்னை எழுத தூண்டி கொண்டு இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல....

07 ஆகஸ்ட் 2012

இவங்கெல்லாம் முதல்வரானால்.......ஒரு சீரியஸ் பதிவு


இன்னும் எவ்வளவு வருடத்துக்குத்தான் ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் தமிழக முதல்வராக பார்ப்பது....ஒரு மாற்றத்துக்கு இவர்களையும் முதல்வர் ஆக்கி அவர்கள் அவர்கள் போடும் முதல் ஆணை என்னவாக இருக்கும்..லேசாக சிந்தித்து பார்த்ததன் விளைவே இது



விஜயகாந்த்: தமிழ்நாடு என்ற பெயர் சுத்த தமிழில் "டமில் நாடு "என்று மாற்றி அமைக்கப்படும்...சட்டசபையில் நாக்கு துருத்தி பேசுவதும், எம் எல் ஏக்களை அடிப்பதும் தவறில்லை என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்...



ராமதாஸ்: தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு வன்னிய நாடு எனவும், வன்னியரல்லாத நாடு எனவும் பெயர் சூட்டப்படும்...நடிகர்,நடிகைகள் நாடு கடத்தப்படுவார்கள்...



திருமாவளவன் : ஆணின் திருமண வயது ஐம்பது என ஆணையிடுவேன்....



சீமான் : தமிழ் மொழியை தவிர பிற மொழிகள் தமிழ்நாட்டில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடை செய்யப்படும்....



சரத்குமார்: என்னை மாதிரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வராக இருக்க முடியும் என சட்ட திருத்தம் பண்ணி ஆணையிடுவேன்.....



தங்கபாலு,இளங்கோவன் (காங்கிரஸ் வகையிராக்கள்): என்னது நான் முதல்வரா? கொஞ்ச நேரம் இருங்க அன்னை சோனியாவிடம் கேட்டு சொல்கிறேன்....



வைகோ: கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்வது நாட்டு மக்களுக்கு கடமை ஆக்கப்படும்...மேடைபேச்சில் உணர்ச்சிவசத்தால் அழுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டு வரப்படும்




டி ராஜேந்தர்: தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்படும் ....அடுக்கு மொழியில் பேசுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டுவரப்படும்



ரஜினியை விடக்கூடாதுல....



ரஜினி: தமிழ் நாடு மக்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று பாபா ஜியை தரிசித்துவிட்டு வருவதற்கு இலவச பயண ஏற்பாடுகள் செய்து ஆணையிடுவேன்......

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

நித்யானந்தா : தமிழ்நாட்டின் பெயர் நித்ய நாடு என மாற்றப்படும்....அனைத்து ஆசிரமங்களும் அரசுடமை ஆக்கப்படும்....தலைமை செயலகம் முதல் தாலுக்கா ஆபிஸ் வரை எங்கும் எதிலும் எனது பக்தைகளே வேலையில் இருப்பார்கள்...துணை முதல்வராக ரஞ்சிதாவும் மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் இதர பக்தைகளும் பதவி வகிப்பார்கள்...

06 ஆகஸ்ட் 2012

சொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா...


தன்மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்தில் நடந்து வரும் நிலையில் தனது சொத்து நிலவரங்களை வெளியுட்டுள்ளார் ஜெயலலிதா...

அந்த அறிக்கை விபரம்வருமாறு......

ஜெயலலிதாவாகிய எனக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களை தமிழக மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எனது தலையாய கடமையாகும்.....

போயஸ் கார்டனில் உள்ள நான் வசிக்கும் இல்லம் எனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்......அதில் நான் வாடகை கொடுத்துதான் குடியிருக்கிறேன்....

கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டை அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து வசூல் பண்ணி ஓய்வு இல்லாமல் உழைக்கும் எனக்கு பரிசாக அளித்தனர் ..ஆனால் அதையும் நான் ஏற்றுகொள்ளாமல் ஏழை மக்களுக்கு எழுதி வைத்துள்ளேன்..... எனக்கு பின் அது ஏழை மக்களுக்கே சேரும்.........


நான் முதல் அமைச்சராக இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதை அனைவரும் அறிவீர்கள்.....அந்த வகையில் எனது வங்கி கணக்கில் ஒன்பது ஆயிரத்து ஒன்பது ரூபாய் உள்ளது.....இப்போது சம்பளமே வாங்குவதில்லை....

எனக்கு என்று சொந்தமாக ஒரு ஸ்கூட்டி பெப் கூட இல்லை.....நான் அணிந்து கொள்ள ஐந்து செட் உடைகள் மட்டுமே உள்ளன.....


சொந்தமாக செருப்புகூட இல்லாமல் சசிகலாவிடமிருந்துதான் வாங்கி போட்டு கொள்வேன்.....


எனக்கு என்று தனியாக செல்போன் இல்லை...


ஜெயா டிவி கூட ஜெயமாலினி என்பவருக்கு சொந்தமானது....அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.....


இப்போது எனது கையில் இருக்கும் பணம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது ரூபாய் மட்டுமே.....


இதுதான் எனது சொத்து கணக்கு.....இது எல்லா வற்றையும் விட தமிழக மக்களின் அன்பே எனக்கு மிகப்பெரிய சொத்தாகும்....
இவ்வாறு இருக்கும் நிலையில் என் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருவது உண்மைக்கு புறம்பானது ..எனவே அவ்வழக்கை தள்ளுபடி செய்ய வண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்...
நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....


நன்றி வணக்கம்.....


சத்தியமா இது உண்மைதானுங்கோ.....

05 ஆகஸ்ட் 2012

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில எளிய வழிகள்


புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எல்லாருக்கும் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்....ஆனால் நிறுத்த முடியாமல் தவிப்பார்கள் ...சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை மறக்க அல்லது அந்த உணர்வை மாற்ற சில எளிய வழிகள் உள்ளன..

சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.ஆனால் இந்த சிகரெட் நம்நாட்டில் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை ...

சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.

புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.

டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.

சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

நன்றி தட்ஸ்தமிழ்
நான் என்ன சொல்றேன்னா புகை பிடிப்பதற்கு முன்னாடி கேன்சரால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்துபோன ஒருவரை பற்றி ( அவர் உங்கள் உறவினராகவோ ,நண்பராகவோ ,தெரிந்தவராகவோ ,உங்கள் நண்பர்களுக்குதெரிந்தவர்களாகவோ இருக்கலாம்) நினையுங்கள்....சிகரெட் குடிக்கும் எண்ணம் மாறும்....நாளடைவில் விட்டு விடலாம்....முயற்சி செய்யுங்கள் நண்பர்களே...

04 ஆகஸ்ட் 2012

1


ஒரு சந்தேகம் .............

எங்களை யாரும் எதிர்கட்சியாக மதிப்பதில்லை # விஜயகாந்த்

நீங்களாவது உங்களை எதிர்கட்சியாக மதிக்கிறீர்களா இல்லையா கேப்டன்..!?



ஒரு கேள்வி ....

எதற்குமே பதில் சொல்லாமலும் ,பேசாமலும் இருப்பதற்கு பெயர் ஊமையா இல்லை மன்மோகன் சிங்கா ?



ஒரு வித்தியாசம் ..........

கோபாலபுரத்தில் இருந்து அறிக்கையோ ,அரசாணையோ வந்தால் அது கலைஞர் ஆட்சி !

கொடநாட்டில் இருந்து அறிக்கையோ ,பல அரசாணைகளோ வந்தால் அது ஜெயலலிதா ஆட்சி !!




ஒரு புதுமொழி ............

குடி குடியை கெடுக்கும்...........

தமிழ்நாடு அரசோ குடிக்க சொல்லி கொடுக்கும்....




ஒரு முரண் ..........

சாலை ஓரங்களில் படுத்து உறங்கினால் அவர் பிச்சைக்காரர்


340 அறைகள் கொண்ட வீட்டில் படுத்து உறங்கினால் அவர் ஜனாதிபதி !

03 ஆகஸ்ட் 2012

திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி..!?!?


திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து யார்? இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் ஸ்டாலினா,அழகிரியா என்பது மாறி இன்று மூன்றாவதாக கனிமொழியும் ரேசில் ஓடுகிறார் என்றால் அது மிகையல்ல.....

அழகிரிக்கு ஆளும்கட்சியாக இருக்கும்போது இருக்கும் வேகம் எதிர்கட்சியாக இருக்கும்போது இல்லை என அவரே வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்...ஜெ வை எதிர்த்து முன்பு போல அதிகம் பேசுவதில்லை...திமுக நடத்தும் எந்த போராட்டத்திலும் மத்திய அமைச்சர் பதவியை காரணம் காட்டி கலந்து கொள்வதில்லை....நாடாளுமன்றத்துக்கே செல்வதில்லை...சென்றாலும் பேசுவதில்லை....சும்மா கோஷ்டிகள் சேர்த்து கொண்டு கட்சிக்குள் கலகம் செய்வதால் தலைவர் பதவி வந்துவிடும் என்ற தப்புகணக்கை சரியாக போட்டு கோட்டை விட்டு கொண்டு இருக்கிறார்....

அடுத்து ஸ்டாலின்....கிட்டத்தட்ட கட்சிக்குள் கருணாநிதிக்கு அடுத்து இவர்தான் என பெரும்பாலோனர்களின் ஆதரவை பெற்று இருந்தாலும் அது முழுமையடைய இன்னும் அவர் நிறைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என பேராசிரியர் அன்பழகனே மறைமுகமாக குத்தி காட்டி இருக்கிறார்.......குறிப்பாக தந்தையை போல எழுத்து திறமையும், பேச்சு திறமையும் அவரிடத்தில் இல்லை...கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட பெயர் சொல்லி அழைக்கும் கருணாநிதியின் அரவணைப்பு தன்மை அவரிடத்தில் குறைவுதான்....

சாதாரண தொண்டனால் இன்னும் ஸ்டாலினை நெருங்க முடியவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் (அண்ணன் கஸாலி போன்றோரின் )கருத்து..இதையெல்லாம் அவர் நிவர்த்தி செய்யவேண்டும்.....


கடைசியாக கனிமொழி....கலைஞரின் மகள் என்பதாலே அரசியலில் நுழைந்தவுடனே எம்பி பதவி, டெல்லி தலைவர்களிடத்தில் பழகும் வாய்ப்பு, பின்பு கட்சிக்குள் தனக்கென ஒரு ஆதரவு வட்டம் என வளர்ந்து வந்தவருக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்றது மிகப்பெரிய சறுக்கல்....

ஆனாலும் அதில் கனிமொழி மட்டுமே குற்றவாளி அல்ல ,கட்சிக்காகவும் ,குடும்பத்துக்காகவும் குற்றவாளி ஆக்கப்பட்டார் எனவும் ஒரு ஆறுதல் காற்று அவரின் ஆதரவாளர்களினால் வீசப்படுகிறது....சிறையில் இருந்து ஜாமீனில் வந்த அவருக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்....


கருணாநிதிக்கு உள்ள எழுத்தாற்றலும், பேச்சாற்றலும்,சகோதரர்களைவிட இவருக்கு கொஞ்சம் அதிகம்..அதற்கு நாடாளுமன்றத்தில் அணுஉலை பற்றி இவர் பேசிய பேச்சு ஒரு உதாரணம்....கூடுதலாக அங்கில புலமையும் உண்டு....இதுவே டெல்லி அரசியல்வாதிகளிடம் கனிமொழிக்கு மற்ற இருவரையும் விட ஒரு அறிமுகத்தை கொடுத்து இருக்கிறது...

அழகிரி,ஸ்டாலின் கோஷ்டியில் இல்லாதவர்கள்,அல்லது அந்த இரண்டு கோஷ்டிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது இவரின் பக்கம் சாய்ந்து வருகிறார்கள்...

எல்லாவற்றையும் விட பெண்ணுக்கு பெண்தான் சரியான போட்டி(ஜெயலலிதாவா கனிமொழியா ? நல்லா இருக்குல்ல ) என்ற ஒரு சின்ன லாஜிக்கும் கனிமொழியின் எதிர்காலத்துக்கு பிரகாசமாக இருப்பதாக என் சிறு மூளைக்குள் உதித்ததன் விளைவே இந்த பதிவு....


ஏதோ நம்மால முடிஞ்சது.....ஹி ஹி...

02 ஆகஸ்ட் 2012

அவங்க அப்பிடி சொன்னாங்க...நான் இப்பிடி சொல்றேன்..எப்பூடி ?..?


தே.மு.தி.க., வினால் தான் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது : விஜயகாந்த் பேச்சு#

தம்பி திரும்ப திரும்ப பேசுற நீ....


............................................... .......................................... ............................................


இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி#

உங்க வீட்ல யாருக்காச்சும் அடிபட்டா நான்கு வருடம் கழிச்சுதான் மருந்து போடுவீர்களா தலைவரே !?

.................................................. ................................. .........................................

மீண்டும் நிதியமைச்சராக சிதம்பரம் பதவியேற்பு #

நாட்டுக்கா இல்லை அவர் வீட்டுக்கா ?

....................................... ......................................... ...............................................


ராஜிவ் இடத்தில் ராகுலை பார்க்கிறேன் : உள்துறை அமைச்சர் ஷிண்டே #

பதிவிதான் வந்தாச்சுல ..அப்புறம் ஏன் கொடுத்த காசுக்கு மேலே கூவுறாரு !...

........................... .................................. ..........................................................

காலரா பிரச்னையில் வெள்ளை அறிக்கை வருமா? : ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கேள்வி #

உங்க சகோதர யுத்தத்தில் எப்ப வெள்ளை அறிக்கை வரும்?

.................................. .......................................... .............................................

புனே குண்டு வெடிப்பு திட்டமிட்ட செயல் : மத்திய உள்துறை செயலர் #

எம்மா பெரிய கண்டுபிடிப்பு.....!இப்பவெல்லாம் குழைந்தைகள் கூட திட்டமிடாமல் எதையும் விளையாடுவதில்லை என யாராச்சும் அவர்கிட்ட சொல்லுங்கப்பா....
........................................ ........................................ ...................................................

உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை # முலாயம் சிங்

தந்தை மகனுக்காற்றும் உதவி...!கலைஞர் வகையிராக்கள் கவனிக்க....

01 ஆகஸ்ட் 2012

காவல் துறையா?கற்பழிப்பு துறையா?....ஜெ வுக்கு இதுவும் கூட பெருமையோ?


கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னதாக இப்போதைய எதிர்க்கட்சி தலைவர்!விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை கற்பழிக்க முயல்வார்...அப்போது விஜயகாந்த் வந்து காப்பாற்றுவார்....

படத்தில் மட்டுமல்ல வருடங்கள் ஓடினாலும் அதே போலீஸ் நிஜத்திலும் இன்னும் கற்பழிப்புகளை நிறுத்தவில்லை....வெகு ஜோராக நடத்தி கொண்டு இருக்கிறது....

சில மாதங்களுக்கு முன்பு இருளர் இன பெண்கள் நான்கு பேரை காவல் துறையினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது....ஆனால் அந்த அதிகாரிகளை கைது செய்யாமல் இடைகால பணி நீக்கம் மட்டும் செய்தது "அம்மா " அரசு..இப்போது அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை...

ரீசன்டா பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை கடமலைகுண்டு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் ,சிறப்பு உதவி ஆய்வாளர் அமுதன் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்துக்கு கூட்டி சென்று சீரழித்து உள்ளனர்...இது பற்றிய செய்தி ஜூனியர் விகடனில் வந்து இருக்கிறது....

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மேலே திருட்டு வழக்கு போட்டு உள்ளே தள்ளியது அந்த காம மிருகங்கள்....இப்போது மதுரை எவிடென்ஸ் அமைப்பு இந்த விவகாரத்தை கையில் எடுத்த பிறகு அந்த இன்ஸ்பெக்டரை இட மாற்றம் மட்டும் செய்துள்ளனர்...வேறு ஒன்றும் நடவடிக்கை இல்லை....

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே கற்பழிப்பு துறையாக மாறி பெண்களை சீரழிக்கும் கொடுமையை எங்கே போய் புகார் சொல்வது?ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஜெயலலிதா ஒரு அப்பாவி பெண் வாழ்க்கை சீரழிந்தது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

பூரா பேரும் சிறையில் இருந்து கொண்டே வெளியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய திமுக வும் இதற்காக போராடவில்லை..

படங்களில் சீறிய விஜயகாந்த் இந்த விவகாரங்களை கையில் எடுக்காமல் பம்மி கொண்டு இருக்கிறார்..ஒரு வேலை படங்களில் போல் துப்பாக்கிகளை எடுத்து சுட ரிகர்சல் பார்க்கிறாரோ என்ன எழவோ தெரியவில்லை....

காவல் துறையில் உள்ள இந்த மாதிரி கருப்பு ஆடுகளை ஜெயலலிதா என்று களை எடுக்கிறாரோ அன்றுதான் பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியும்....இதுதான் இன்றைய தமிழகத்தின் அவல நிலை...

எதற்கெடுத்தாலும் அம்மா புகழ் பாடும் அமைச்சர்களுக்கு இது கூட ஒரு பெருமையாக தெரியுதோ என்னவோ!