26 டிசம்பர் 2012

பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்துக்கள் என்ன?!....



இப்போது நாடெங்கிலும் வலியுறுத்த படுவதும் விவாதிக்கப்படுவதும்  பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்  என்பதுதான்...முதலில் இந்த சம்பவங்களை கற்பழிப்புகள் என கூறுவதை கூட என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...ஒரு பெண்ணினால் அந்த அயோக்கியனுகளை எதிர்த்து போராட முடியாமல் அப்பெண் தோல்வி அடைகிறாள்..அது ஒரு வன்முறை ..பாலியல் வன்முறை ..கூட்டாக  5,6 பேர் சேர்ந்து ஒரு பெண்ணின் மீது நிகழ்த்திய பாலியல் கலவரம்...

 டெல்லி வன்முறை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  கொடுக்க வேண்டும் என நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வந்தாலும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா என விதண்டாவாதம் பேசுபர்கள் ஒரு பக்கம்...

மரண தண்டனைகளை  சரி என ஒப்புகொண்டால் எங்கே "இஸ்லாமிய சட்டங்களை நாம் ஏற்று கொள்வதுபோல ஆகிவிடுமே "என வறட்டு பிடிவாதம் பேசுப்வர்கள் ஒரு பக்கம்  இருக்கத்தான் செய்கிறார்கள்

இதில் முதாலவது வாதத்திற்கு "மருந்து கொடுத்தால்தானே  நோய் குணமாகிறதா இல்லையா என தெரியுமே தவிர  இந்த மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாகுமா என கேட்டு கொண்டே இருந்தால் நோய்தான் முற்றும்"என்பது என் பதில்...ஆக  முதலில் செய்த குற்றத்துக்கு  தண்டனை கொடுக்காமல் தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறையுமா என கேட்பது வந்த நோய்க்கு மருந்து எடுக்காமல் அந்த நோயை முற்ற விடுவதற்கு சமமான முட்டாள்தனமான செயலாகும்...

அடுத்து பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனையை  சரி என ஒப்பு கொண்டால் "கற்பழிப்புகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் மரண தண்டனையை ஒப்புகொண்டதுபோல ஆகி விடுமே "என  என்னும் வறட்டு பிடிவாதகாரர்களுக்கு "நீங்கள் செல்லும் பாதையில் முள் கிடக்கிறது  என உங்களுக்கு பிடிக்காதவர்கள் சொன்னாலும் அதை கேட்பீர்கள்தானே "அதுபோல  இதையும் நினைத்துகொள்ளுங்கள் என்பது என் பதில்...

கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் அந்த குற்றங்கள் இப்போது நடப்பது இல்லையா என கேட்பவர்களுக்கு "ஆம் ...நம் நாட்டில் விட மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவுதான்...சிங்கப்பூர்,மலேசியா வில் எல்லாம் இது போன்ற  குற்றங்கள் நடப்பது மிக மிக குறைவு..அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றங்கள் மிகவும் குறைவு"

உடனே மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் கூட பாலியல் குற்றங்கள் குறைவுதானே தவிர அறவே குற்றங்கள் நடக்காமல் இல்லையே என அடுத்த கேள்வி வரும்...

மரண தண்டனைகளால்  குற்றங்களை  அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் இதுபோன்ற குற்றங்களை  குறைக்கவாவது  முடியும்..ஆனால் இதுவும் இல்லாவிட்டால் குற்றங்கள் பெருகும்தானே தவிர குறையாது...

எல்லா நோய்களுக்கும் நாம் மருந்து எடுத்துகொண்டாலும் கேன்சர் மாதிரியான நோய்கள் அந்த மருந்துகளையும் மீறி பரவுவதில்லையா?

இப்போது சொல்லுங்கள் "ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ,சீராக வளர்த்து அழகு பார்த்தது எல்லாம் கொடூர காமுகர்களால் அந்த பெண் சீரழிக்க படுவதற்குத்தானா?

சீரழிக்கபட்டவர்களுக்கு மருந்து  "அந்த விஷ கிருமிகளை அழிப்பதுதான் "

இதுபற்றிய சக பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்...நீங்கள் முஸ்லிம் என்பதால் மரண தண்டனையை  ஆதரித்து எழுதுகிறீர்கள் என மதச்சாயம் பூசாமல் நீங்கள் உங்களின்  உணர்வுகளை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...


36 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. "..நம் நாட்டில் விட மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவுதான்...சிங்கப்பூர்,மலேசியா வில் எல்லாம் இது போன்ற குற்றங்கள் நடப்பது மிக மிக குறைவு..அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றங்கள் மிகவும் குறைவு""

    சிங்கப்பூரில் பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை இல்லை. சிறை தண்டனை மற்றும் பிரம்படி மட்டுமே.

    இந்த தண்டனை இஸ்லாமிய தண்டனைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. சீன கலாச்சாரத்தில் இருந்து பெற்று கொள்ளப்பட்டவை. இன்றும் சீனாவில் மரண தண்டனை உண்டு. பிரம்படியும் இஸ்லாமிய தண்டனை முறையை ஒட்டி வழி வந்தவை அல்ல.

    மலேசியாவிலும் பாலியல் வல்லுறவு மிக குறைவா?

    மலேசியாவில் ஆண்டு தோறும் 3000க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக போலீஸ் பதிவுகள் கூறுகின்றன. பதிவு செய்யப்படாத பாலியல் வல்லுறவுகள் இந்த தொகையை விட 2மடங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
    மலேசியாவில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் அந்த பெண்ணிலும் பிரச்சினை/தவறு என்று கருதும் / அந்த பெண்ணை ஒதுக்கி தள்ளும் சமூகமே அங்குள்ளது. (இந்தியா போல் என்றும் சொல்லலாம்)

    மலேசியாவின் சனத்தொகை 29மில்லியன் (2012) இந்தியாவின் சனத்தொகை (1210 மில்லியன் ) அதற்க்காக இந்தியாவும் மலேசியாவும் ஒன்று என்பது போல் வாதிடவில்லை. நீங்கள் மிக குறைவு என்று சொன்னதற்கான பதில் மட்டுமே.

    தண்டனைகளால் மட்டும் குற்றங்களை தடுக்க முடியாது. பெண்கள் மீதான பார்வையை ஆணுக்கு சிறு வயதிலிருந்து வழங்குவதன் மூலமே தீர்வுகள் எட்ட முடியும் என்பது எனது கருத்து.

    மலேசியாவில் அரச குடும்பத்தவர்கள் இம்மாதிரியான பிரச்சினைகளில் மாட்டு பட்டால் ஒன்றும் செய்ய முடியாது.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பாலியல் வன்முறைக்கு பிரம்படி என்பது உண்மைதான் இருந்தாலும் Kidnapping or abducting in order to murder - Section 364 Penal Code என்ற சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கவும் வழி இருக்கிறது என படித்து இருக்கிறேன்...எது எப்படியாக இருந்தாலும்,மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக இருந்தாலும் இம்மாதிரியான குற்றங்கள் இந்த நாடுகளில் குறைவு...

      நீக்கு
    2. #தண்டனைகளால் மட்டும் குற்றங்களை தடுக்க முடியாது.#

      ஆனால் குறைக்க முடியும் ...குற்றங்கள் குறைந்தால் அது போதாதா?!

      நீக்கு
    3. #பெண்கள் மீதான பார்வையை ஆணுக்கு சிறு வயதிலிருந்து வழங்குவதன் மூலமே தீர்வுகள் எட்ட முடியும் என்பது எனது கருத்து.
      #

      உண்மை.. ஆனால் பெண்கள் மீதான பார்வையை தவறாக காட்டுவதில் ஊடகங்கள் குறிப்பாக சினிமாக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன ...சினிமாவில் வரும் அரை குறை ஆடைகள்,ஆபாச காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும்..எந்த சினிமா காரானாவது நடிகைகளை தோல் உரிக்காமல் காட்டி இருக்கிறானா? சிறு வயதிலயே சமூகம் கெட்டு போவதற்கு காரணம் சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக காட்டுவதால்தான்...

      நீக்கு
  3. அரபு நாடுகள் பற்றி எனக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு
  4. இதற்கு உடனடி தீர்வு அதிரடியான தண்டனை என்றாலும் ஆண் பெண் பாலியல் குறித்த தெளிவு இந்தியர்களிடம் இல்லாமை இதுபோல் நடக்கச் செய்கிறது.பாலியல் கல்வி இருக்கும் நாடுகளில் இது குறைவு.

    பதிலளிநீக்கு
  5. //தண்டனைகளால் மட்டும் குற்றங்களை தடுக்க முடியாது. பெண்கள் மீதான பார்வையை ஆணுக்கு சிறு வயதிலிருந்து வழங்குவதன் மூலமே தீர்வுகள் எட்ட முடியும் என்பது எனது கருத்து.//

    //உண்மை.. ஆனால் பெண்கள் மீதான பார்வையை தவறாக காட்டுவதில் ஊடகங்கள் குறிப்பாக சினிமாக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன ...சினிமாவில் வரும் அரை குறை ஆடைகள்,ஆபாச காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும்..எந்த சினிமா காரானாவது நடிகைகளை தோல் உரிக்காமல் காட்டி இருக்கிறானா? சிறு வயதிலயே சமூகம் கெட்டு போவதற்கு காரணம் சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக காட்டுவதால்தான்...// இவைகள் சரியான தீர்வு நானும் இதையே முன் வைக்கிறேன் இருப்பினும் பொது இடங்களில் படுக்கை அறையில் செய்யவேண்டிய செயல்களை தவிர்க்கவேண்டும் அதுவே அதிகப்படியான குற்றசெயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாகிவிடும். பார்க், பீச், பேருந்து, ரயில் போன்ற பொது இடங்களில் காதலர்கள் கட்டுப்பாட்டுடன் நடப்பது நலம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நட்பு என்றால் நன்பர்களாகத்தான் இருக்கவேண்டும் அதில் ஆண் நன்பர் பெண் நன்பர் என்று பிரிவினை வருகிறதோ அப்போதே அவர்கள் விபரீதத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #பார்க், பீச், பேருந்து, ரயில் போன்ற பொது இடங்களில் காதலர்கள் கட்டுப்பாட்டுடன் நடப்பது நலம். #

      உண்மை....சரியான கருத்து

      நீக்கு
  6. கடும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு. அதற்கு இந்திய சட்ட திட்டத்தில் தேவையான அளவு மாற்றங்கள் தேவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. பதிவர்களின் கருத்தைக் கேட்கும் நீங்கள் மாற்றுக் கருத்தை இங்கு எழுதாதே என விரட்டும் பதிவரை விட நாகரிகமானவர். நன்று. ஒருபதிவர் அவரும் இசுலாமியர்தான் இப்படித்தான் விரட்டினார் என்னை. அவர் என்னமோ நான் வன்புணர்வை ஆதரிப்பதாக பந்தா காட்டி விட்டார். போகட்டும்.

    எனினும் உங்கள் பதிவில் வரும் சில சொற்கள் மாற்றுக்கருத்தை வைப்போரை மிரட்டும் தொனியில் இருப்பதைக் கவனிக்கலாம். மரணை தண்டனைகொடுத்தால் குற்றம் குறையுமா எனக்கேட்பது விதண்டாவாதமென்றும் மற்ற‌ சில கருத்துகளை வறட்டு வாதம், முட்டாள்தனமென்றும் சொல்கிறீர்கள். இச்சொற்களைத் தவிர்க்கமுடியாதா?

    அவையெல்லாம் வாதங்கள். அவ்வாதங்களை வைப்போர் குற்றவாளிகளின் உறவினர்களல்ல. மரணைதண்டனை கூடாதென்பதில் அவர்களுக்கென்ன தனிப்பட்ட இலாபம்?

    அவர்கள் பார்வையில் அவை சரி. உங்கள் பார்வையில் இவை சரி. ஆயிரம் பேர் இருக்குமிடத்தில் ஆயிரத்தோரு கருத்துக்கள் வரத்தான் செய்யும். ஒரேஒரு கருத்தே இருக்க வேண்டுமென்றால் அராஜகம். இல்லையா?

    இனி இப்பிரச்சினைபற்றிய கருத்துக்கு வருவோம்.

    அடுத்த மடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #ஒருபதிவர் அவரும் இசுலாமியர்தான் இப்படித்தான் விரட்டினார் என்னை.#

      உங்களுக்குள் என விவாதம் நடந்தது என் தெரியாமல் நான் அதை பற்றி பேச விரும்ப வில்லை..ஆனால் நீங்கள் இஸ்லாமிய பதிவர் என்று சொல்லாமல் ஒரு பதிவர் என்றே குறிப்பிட்டு இருக்கலாமே ?

      நீக்கு
    2. #எனினும் உங்கள் பதிவில் வரும் சில சொற்கள் மாற்றுக்கருத்தை வைப்போரை மிரட்டும் தொனியில் இருப்பதைக் கவனிக்கலாம்.#

      தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்...இங்கு யாரும் யாரையும் மிரட்டவெல்லாம் முடியாது...முட்டாள்தனம்,விதண்டாவாதம் என்பது மிரட்டலான சொற்கள் அல்ல...

      நீக்கு
  8. பாலியல் வன்முறை இருவகை: ஒன்று வன்புணர்வு. இரண்டு வன்புணர்வோடு சேர்ந்து கொலை. அப்பெண் சாகடிக்கபபடுகிறாள். முதலாவது வெறும் புணர்வு. இரண்டாவது கொலை. இதில் எதற்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும்?

    மரணதண்டனை கொலைக்கு. வெறும் புணர்வாகவே முடிந்திருந்தால் அங்கே மரணதண்டனை வருமா என்பதற்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.

    இரண்டும் சேர்ந்த நிகழ்வில் மரணதண்டனைச் சரி என்றால், இப்படிப்பட்ட வன்கொடுமை கலந்த கொலைகள் நிகழ்கின்றன. அங்கே புணர்ச்சி மட்டும் இருக்காது. வன்கொடுமையும் கொலையும் உண்டு.

    எ.காட்டு. ஒரு பெண்ணின் நகைகளைக்கொள்ளையடிப்பவன் அவள் தன்னைக்காட்டிக்கொடுத்துவிடுவாளோ என்று கொலை செய்கிறாள். அல்லது அவள் இவனுடன் போராடி தன் நகைகளைக்காப்பாற்ற முயல அவன் இவளைக்கொலை செய்கிறான்.

    இங்கே கொள்ளை, வன்கொடுமை (அவளோடு போராட்டம், அவளைக்கொடூரமாகத் தாக்குதல்; இறுதியில் கொலை. ஆனால் வன் புணர்ச்சி மட்டுமில்லை அவன் பெண்ணாக இருந்தும்கூட. மற்றும் பலபல கொலைகளுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். அனைத்திலுமே பாலியல் பலாதகாரமிருக்முமெனப்து கிடையாது.

    இப்போது சொல்லுங்கள். இவைகளுக்கும் மரணதண்டனை கொடுக்கலாமா?

    ஏன் இதைக் கேட்கிறேனென்றால், எவை எவை மரணதண்டனைக்குள்ளாகவேண்டுமென்பதுதான் கேள்வி. இதற்கு கொடுத்தால் அதற்கேன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழும். இதுவும் வன்கொடுமைதான். இப்பெண்ணையும் 5 பேர் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யலாம். இதற்கு ஏன் மரணதண்டனை இல்லை. அதற்கு மட்டும்?

    I shall continue after ur reply.

    பதிலளிநீக்கு
  9. பாலியல் வன்முறை இருவகை: ஒன்று வன்புணர்வு. #இரண்டு வன்புணர்வோடு சேர்ந்து கொலை. அப்பெண் சாகடிக்கபபடுகிறாள். முதலாவது வெறும் புணர்வு. இரண்டாவது கொலை. இதில் எதற்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும்?

    மரணதண்டனை கொலைக்கு. வெறும் புணர்வாகவே முடிந்திருந்தால் அங்கே மரணதண்டனை வருமா என்பதற்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.#

    வன்புணர்வின்போதே அப்பெண் இயலாமையால் பாதி இறந்துவிடுகிறாள் ..பாலியல் பலாத்காரத்திற்கு பின் அப்பெண் அதற்கு முன்பு போல இயல்பாக நடமாட முடியாமல் தினம் தினம் மனதால் இறந்துகொண்டுதான் இருக்கிறாள்...நீங்கள் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் என்பது என் கருத்து ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு நான் கேட்டது பாலியல் பலாத்காரத்தை பற்றி...என்னுடைய தனிப்பட்ட கருத்து கொலைக்கும் மரண தண்டனை வேண்டும் என்பதுதான்...

      நீக்கு
    2. சரி உங்கள் கருத்தின்படி அனைத்து பாலியல் பலாத்காரங்களிலுமே அப்பெண் மரணிக்காவிட்டாலும் கூட மரணித்ததற்குச் சமமே என்றும் அவ்வன்முறையைச் செய்தவர்கள் கொலைகாரர்களே என்றும், அனைத்திற்கும் மரணதண்டனையே என்றும் புரிதல் வருகிறது.

      அதுதான் பிரச்சினை. எல்லாவற்றுக்குமே மரணதண்டனையா?

      என்னுடைய கன்சர்ன் என்னவென்றால் எதற்கு மரண தண்டனை என்பதில் தெளிவிருக்கவேண்டும். இரண்டாவது, உங்கள் கருத்தின்படி எல்லாக் கொலகளுக்குமே மரண தண்டனையென்றால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மரணதண்டனைகள் இந்திய நீதிமன்றங்கள் தரவேண்டியதிருக்கும்: ஏனெனில் எந்தக்கொலையும் கருணைக்கொலையன்று. கொடூரமான முறையில் செய்யப்பட்டவைகள்தான்.

      நீதிமன்றங்களுக்கு வேலை இலகு. ஏன் எங்கே எவரால் எப்படி என்ற கேள்விகளுக்கு இடமேயில்லை. கொலையா கொடு தூக்குத்தண்டனை என்று வேலை சுலபம்.

      நீக்கு
    3. யாருக்கு கொடுக்க போகிறோம் தூக்கு தண்டனை?நல்லவர்களுக்கா?இல்லையே

      நீக்கு
    4. தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள் (ஒரு பெண் வீட்டிலுள் நுழைந்த கொள்ளைக்காரனோடு அல்லது தன்னை வன்புணர வந்தவனோடு மல்லுக்கட்டிப் போராடும் வேளையில் அவனைக் கொல்லனேருகிறது, சிறுவன் தன் தந்தையின் துப்பாக்கியை வைத்து தன் தமக்கையை விளையாட்டாக மிரட்டிய போது அது உண்மையில் வெடித்து அவள் இறக்கிறாள்)

      இப்படிப்பட்ட ஒரு சில கொலைகளைத் தவிர மற்றவை கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டு அல்லது இரக்கமேயில்லாமல் செய்யப்படுபவை. குறிப்பாக கள்ளக்காதல் கொலைகள். துண்டுதுண்டாக வெட்டி வெட்டிய பகுதியை தனித்தனியாகக் கட்டி தூக்கியெறிவார்கள் கண்ட இடங்களில். காதல் மறுப்பு கொலை: பிராட்வேயில் ஓட ஓவ விரட்டிக்கொன்றான் பட்டப்பகலில். இவர்களில் யார் நல்லவர்கள். தற்காப்புக்குச் செய்ப்வர்களைத்தவிர வேறெவருமேயில்லை.

      என் கேள்வி: இப்படிப்பட்ட கொலைக்குற்றங்கள் ஒவ்வொரு மாவாட்ட செச்னஸ் கோர்ட்டுகளிலும் ஏராளம்.

      அனைவரையும் தூக்கில் போட்டால் எங்கு பார்த்தாலும் தூக்குத்தண்டனை என்றுதான் வரும். இவர்கள் அனைவரும் கெட்டவர்கள்தான். ஏன் எல்லாரையும் தூக்கில் போடக்கூடாது? இதை நான் திரும்பதிரும்பக்கேட்கிறேனென்றால், எவரைத் தூக்கில் போட வேண்டுமெனபதில் 'தூக்கே சரி' என்ற கட்சியாளரிடம் தெளிவில்லை

      நீக்கு
  10. "பார்க், பீச், பேருந்து, ரயில் போன்ற பொது இடங்களில் காதலர்கள் கட்டுப்பாட்டுடன் நடப்பது நலம்"

    பதிலளிநீக்கு
  11. ஒரு தண்டனை என்பது நீதிமன்றத்தால் தீர விசாரிக்கப்பட்டு நீதிபதியால் தீர்ப்பளிக்கப்படுபவையாகவே இருக்கவேண்டும். இன்ன குற்றத்திற்கு இதுதான் தண்டனை என்று நிரந்தரமாக நிர்ணயிக்கப்படுவது என்பது நமது தேசத்திற்கே எவ்வளவு ஆபத்தானது என்று சிந்திக்காமல் அனைவரும் கூச்சல் இட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    தலைக்குமேல் வெள்ளம் புரளும்போது சான் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்று ஆகிவிடும். ஒருவன் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு கற்பழிப்பு செய்துவிட்டான் அது எந்த சூழ்னிலையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.தான் குற்றம் செய்துவிட்டேன் என்று அவன் உணர்கிறான் உங்கள் வேண்டுகோலின்படி அரசு நிர்னயித்த மரணதண்டனைதான், தன் முடிவு தனக்கு தெறிந்துவிட்டது.இப்போது அவன் எதுவேண்டுமானாலும் செய்வான் எத்தனை கற்பழிப்பு கொலை என அவன் சாகும்மட்டும் செய்துகொண்டே இருப்பான். நம்பிக்கை எனும் மெல்லிய நூலினால் மனிதர்கள் கட்டப்பட்டுள்ளனர் அதை அறுப்பதை விட உலகத்தையே அழிப்பது என நினைப்பது மேலானதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருது வாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்...ஆனால் குற்றம் செய்தவனைவிட பாதிக்கப்பட்டவர்களின் வலிக்குத்தான் நுதலில் மருந்திட வேண்டும்...இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என வந்தால் அது குற்றங்களை குறைக்குமே தவிர அதிகரிக்காது...

      நீக்கு
  12. " ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ,சீராக வளர்த்து அழகு பார்த்தது எல்லாம் கொடூர காமுகர்களால் அந்த பெண் சீரழிக்க படுவதற்குத்தானா?"

    மதத்திற்கு அப்பாற்பட்டு , பெண்ணைப் பெற்றவன் என்ற முறையில், எவருமே உங்களுடன் உடன்படுவர்

    பதிலளிநீக்கு
  13. இதற்கும் பதிலுண்டு.

    காமக்கொடூரர்கள் என்றும் எப்போதும் உண்டு என்பதுமட்டுமன்றி. அவர்கள் எவராகவும் இருக்கலாம்.

    கடுந்தண்டனை கொடுக்கப்பட்டாலும் சந்தர்ப்பம் வசதியாக கிடைத்தால் அக்கொடூரங்கள் நிகழ்த்தான் செய்யும். விளக்கினால், தூத்துக்குடி கோர்ட்டில் தூக்குத்தண்டனை பவானியைக்கொன்றவனுக்குக் கொடுக்கப்பட்டு அது விளம்பரம் செய்யப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை எல்லாரும் படித்துவிட்டு காமக்கொடூரம் குறைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம்.

    இன்னொரு நாள் இன்னொரு காட்டுப்பாதையில் பவானி போன்ற பெண் தனியாக வரும்போது, அதை ஒரு காமக்கொடூரன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

    அவன் அவளைக் கெடுக்க விழையும்போது இப்படி நான் செய்தால் எனக்குத் தூக்குத்தண்டனை நிச்சயம் என்று அவனுக்குப்புரியும் அதே வேளையில், இது எப்படிப்பட்ட இடம்? இங்கு இப்பெண் எபபடி கத்தினாலும் எவருக்கும் கேடகாது. என்னை எவராலும் கண்டுபிடிக்க முடியாது. இவளைக்கொன்று புதைத்தாலும் நான் செய்தது என்று தெரியாது.

    இப்படிப்பட்ட உறுதிகள் அவனுக்கு அப்போது தோன்றினால் அவன் கொடூரத்தைச்செய்வான்.

    பவானியின் கதை நமக்குத் தெரிய வந்தது. தெரியாத கதைகள் எத்தனை எத்தனை. அக்கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மனிதனின் மறுபக்கம் இருந்துகொண்டே இருக்கும். பிடிபட்டால்தான் குற்றவாளி. பிடிபடாவிட்டால் அவன் இந்தியாகேட்டில் தூக்குத்தண்டனை கொடு என்று கோஷமிட்டவர்களில் ஒருவனாக இருப்பான்.

    பெண்ணைப்பெற்றவர்களுக்கு ஒரே வழி; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துத் தங்கள் பெண்களைக் காப்பாற்றுவதுதான். அவர்களே நல்ல பெற்றோர்கள். Use your brains. Not your emotions to live happily.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் உங்களின் அதீத கற்பனை...செய்த தவறுக்கு முதலில் தண்டனை கொடுப்பதை பற்றி யோசிப்போம்...பிறகு மற்றதை பேசலாம்

      நீக்கு
  14. நிச்சயம் மரண தண்டனை அந்த கயவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  15. அரபு நாடுகளின் 2 சாட்சி இருந்தால் மட்டுமே வன்புணர்ச்சி நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படும் என கேள்வி.
    அப்படியாகில் அங்கே இந்த டெல்லி பெண்ணுக்கு நடந்தது கூட வன்புணர்ச்சியாகாது. அப்படியாகில் அங்கே வன்புணர்ச்சி
    குறைவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாட்டிலும் குற்றங்களை நிரூபிக்க சட்டம் சாட்சியை கேட்கத்தானே செய்கிறது?நான் கேட்டது கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வேண்டுமா இல்லையா?

      நீக்கு
  16. //உங்கள் கருது வாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்...ஆனால் குற்றம் செய்தவனைவிட பாதிக்கப்பட்டவர்களின் வலிக்குத்தான் நுதலில் மருந்திட வேண்டும்...இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என வந்தால் அது குற்றங்களை குறைக்குமே தவிர அதிகரிக்காது...//

    தண்டனை என்பதே அடுத்த குற்றம் நடைபெறாமல் இருக்கத்தான். முதலில் நீங்கள் தண்டனைக்கும் பழிவாங்களுக்குமான வேறுபாடுகளை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒருவன் பிடிபடுவதற்கு முன்னதாக அவனுக்கான தண்டனை தெறியக்கூடாது என்பதே. இது அடுத்த தொடர் குற்றங்கள் ஒரே நபரால் நிகழ்த்தப்படும். குற்றவாலிகள் குறைவார்கள் ஆனால் குற்றங்கள் அதிகரிக்கும்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....