தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான்....ஆனால் இந்த இரண்டுமே தானாக தோன்றிய கட்சிகள் அல்ல...இன்னொரு கட்சியிலிருந்து உருவானவை ..அதிமுக தோன்றியது பற்றி ஏற்கனவே நான் பதிவிட்டு இருந்தேன்..இப்ப திமுக எப்படி உருவானது என கொஞ்சம் பிளாஷ்பேக்...எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதானே....!
அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு அடுத்த நிலையில் இருந்து வந்தார்.... இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க ஆங்கிலய அரசு முடிவு எடுத்து இருந்த நேரம் அது....அந்த சமயத்தில் பெரியார் "1947 ஆகஸ்ட் 15 துக்க நாள்" என்று அறிக்கை விட்டார்....
கட்சியின் மற்ற தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் வெளியிட்ட அறிக்கை, கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா பெரிதும் வேதனை அடைந்தார். பெரியாரின் அறிக்கை பற்றி, மற்ற தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் அண்ணா கலந்து ஆலோசித்தார்.
முடிவில் "சுதந்திர தினம் துக்க நாள் அல்ல. இன்ப நாள்" என்று அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது பகிரங்கமாகியது. அண்ணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
"என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை அஞ்சாமல் கூறுவேன்" என்றார் அண்ணா."பெரியாரும், அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள். இனி ஒன்று சேர வழியே இல்லை" என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு அதிசயம் நடந்தது.
ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமரச்செய்துவிட்டு, நடந்தே வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் பேசும்போது "பெட்டிச்சாவியை நானே வைத்துக்கொண்டு எத்தனைக்காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாதுரையிடம் கொடுத்துவிட முடிவு செய்துவிட்டேன்" என்று அறிவித்தார்.
மாநாட்டில் எழுந்த கைதட்டல் அடங்க, வெகுநேரம் பிடித்தது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தீர்ந்துவிட்டதாக அனைவரும் எண்ணினார்கள். 1949 ம் ஆண்டு மே மாதம் 14 ந்தேதி, அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
அவரைப் பெரியார் சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசியது, திராவிடக் கழகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சமயத்தில், கோவையில் "முத்தமிழ் மாநாடு" நடந்தது. அதில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டனர். அண்ணா பேசும்போது, "திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் பேசியது என்ன என்பதை அறிய நாடு ஆவலாக இருக்கிறது. அதனை இந்த மாநாட்டில் பெரியார் விளக்கிட வேண்டும்" என்று கூறினார்.
"அது முற்றிலும் என் சொந்த விஷயம். மாநாட்டில் வெளியிட முடியாது" என்று பெரியார் கனல் கக்க பதிலளித்தார். பின்னர் பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், தனக்கொரு வாரிசு ஏற்படுத்திக்கொள்வது பற்றி ராஜாஜியுடன் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்னொரு அறிக்கையை வெளியிட்டார்.
"எனக்கும், என் பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்கத்தின் நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறவருமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமை ஆக்கிக் கொண்டு, ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்பதே அந்த அறிக்கை.
பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தவர், இப்போது திடீரென்று வாரிசு நியமிக்கப் போவதாக அறிவித்தது, திராவிட கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கிடையே, மணியம்மையை பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காகத் திருமணப் பதிவாளரிடம் அவர் மனு செய்திருப்பதாகவும், சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
அதைப் படித்த அண்ணாவும், மற்ற தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பெரியாரின் வயது 70, மணியம்மைக்கு வயது 30. மணியம்மை பெரியாருடனேயே இருந்து பணி விடைகள் செய்து வந்தார். "வேண்டாம் இந்த பொருந்தாத் திருமணம்" என்று பெரியாருக்கு தந்திகளும், கடிதங்களும் குவிந்தன.
ஆனால் திட்டமிட்டபடி 9.7.1949 ல் திராவிடக் கழக பிரமுகர் சி.பி.நாயகத்தின் இல்லத்தில், திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறியது...
இதனை தொடர்ந்து திராவிடர் கலக்கம் உடைந்தது..அண்ணா அவர்களால் திமுக செப்டம்பர் 18 அன்று உருவாக்கப்பட்டது.....செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
செய்தி சேகரிப்புக்கு நன்றி :காலச்சுவடுகள்
ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில் இருந்து விலக தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம் சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார் என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!
| Tweet |
.jpg)


.jpg)


