28 டிசம்பர் 2010

2010 இன் டாப் 10

புது வருடம் பிறக்கபோகிறது.....முடிய போகும் வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்...... அதற்க்கு முன்பு தமிழ்மணம் விருதுகள் முதல் சுற்றில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....மேலும் உங்கள் வாக்குகளை எனக்கு தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....அரசியல், சமூக விமர்சனங்கள் எனும் பிரிவில் எனது படைப்பு ஸ்பெக்ட்ரம் நடப்பது என்ன என்ற தலைப்பில் உள்ளது......உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்......

1. விக்கிலீக்ஸ் – அமெரிக்காவைப் பற்றி இத்தனை காலமாக உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த தோற்றத்தை ஒரு சில நாட்களில் அப்படியே மாற்றிப் போட்டது விக்கிலீக்ஸின் ரகசிய ஆவண வெளியீடுகள். அமெரிக்க தூதரகங்களுக்கிடையேயும், தூதரகங்களிலிருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸ்,. உலகையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

2. ஸ்பெக்ட்ரம் ஊழல் – இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல். சில லட்சம், பல லட்சம், சில கோடி, பல கோடி என்ற சின்னக் கணக்கிலேயே ஊழல்களைப் பார்த்துப் பழகிப் போன இந்திய மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கு யார் காரணம் என்று அத்தனை பேரும் போட்டு பிராண்டிக் கொண்டிருந்த வேளையில் அதிகாரத் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியது. இந்தியாவின் மிகப் பெரிய பரபரப்புச் சம்பவம் என்ற பெயரையும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தட்டிக் கொண்டு போய் விட்டது.

3. பீகார் சட்டசபைத் தேர்தல் – பீகாரில் தேர்தல் என்றாலே தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் பீதியாகவே இருக்கும். அந்த அளவுக்கு வன்முறைகள் கச்சை கட்டிக் கொண்டு பறக்கும். ஆனால் சற்றும் அசம்பாவிதம் இல்லாமல், வெட்டுக் குத்து இல்லாமல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலை 2010ல் கண்டனர் பீகார் மக்கள். அதை விட அதிசயமாக, நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியும் கிடைத்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், பீகார் மீதான ஏளனப் பார்வையை துடைத்துப் போட வைத்து விட்டது.

4. ஆந்திர அமளிகள் – தெலுங்கானா பகுதியில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறை, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைத்த ஜெகன் மோகன் ரெட்டி விவகாரம், 2010ம் ஆண்டின் முக்கிய இந்திய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேபோலஜெகன் மோகன் ரெட்டியால் காங்கிரஸ் படு பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

5. காஷ்மீர் கலவரம் – காஷ்மீரில் நடந்த வரலாறு காணாத வன்முறை, பாதுகாப்புப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல் ஆகியவற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த கொடுமை நடந்த ஆண்டு 2010. இளைஞர்கள் பட்டாளம் வெறும் கற்களை கையில் எடுத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினரையும், காஷ்மீர் பள்ளத்தாக்கையும் உண்டு இல்லை என்று செய்து விட்டனர். மாதக் கணக்கில் நீண்ட இந்த கலவரத்தைத் தடுக்க முடியாமல் கடுமையாக திணறியது மத்திய அரசு. இறுதியில் பல்வேறு உத்தரவாதங்களைக் கொடுத்து, அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசி, சமரசப் பேச்சுவார்த்தைக் குழு அமைத்து ஒரு வழியாக காஷ்மீரை தற்போதைக்கு அமைதிப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த ஆண்டின் மிக முக்கிய சம்பவங்களில் காஷ்மீர் வன்முறைக்கும் நிச்சயம் இடம் உண்டு.

6. மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வன்முறை – நாட்டை உலுக்கிய மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறைகளுக்கு மிக முக்கிய உண்டு. தாண்டேவாடா காட்டுப் பகுதியில் அவர்கள் நடத்திய வெறித் தாக்குதலில் சிஆர்பிஎப் படையினர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பயங்கரம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல ரயில் கவிழ்ப்பு சம்பவங்களும் மக்களை அதிர வைத்தன. மேற்கு வங்கத்தையே ரத்தக் காடாக்கி நக்சல்களின் வெறியாட்டம் இந்த ஆண்டின் மிக பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.

7. ஜெயலலிதாவின் தொடர் கூட்டங்கள் - காசு கொடுத்து வந்த்தாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தி பிரமாண்டமான கண்டனக் கூட்டங்கள், தமிழக அரசியலில் இந்த ஆண்டு நடந்த பரபரப்பு சம்பவங்களில் முக்கியமானதாக இடம் பெறுகிறது. இந்தக் கூட்டங்கள் நடக்கும வரை அதிமுக அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த்து. கட்சியிலிருந்து பெரும் பெரும் புள்ளிகள் எல்லாம் கியூ வரிசையில் நின்று வெளியேறி திமுக பக்கம் போய்க் கொண்டிருந்தனர். ஆனால் மூன்றே கூட்டங்களில் ஒட்டுமொத்த அதிமுகவின் அவல நிலையையும் அப்படியே மாற்றிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. இந்தக் கூட்டங்களால் அதிமுகவுக்கு லாபம் கிடைக்குமா என்பது வரும் சட்டசபைத் தேர்தலின்போதுதான் தெரியும்.

8. நாடாளுமன்ற அமளி – 2010ம் ஆண்டில் நாட்டை அதிர வைத்த இன்னொரு முக்கியச் சம்பவம் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற அமளி. இந்திய நாடாளுமன்றத்தில்இப்படி ஒரு அமளியை, தொடர் போராட்டத்தை இந்த தலைமுறை கண்டதில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை ஒரு நாள் கூட நடத்த முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம். இந்த போராட்டத்தின் விளைவு மக்கள் வரிப்பணத்தில் ரூ. 146 கோடி தரிசானதே.

9. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி – தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி உலக மக்களை அப்படியே கட்டிப் போட்டு மெய் சிலிர்க்க வைத்து விட்டது. கால்பந்துப் போட்டி என்றாலே வன்முறை என்ற இலக்கணத்தைத் தகர்த்து, சற்றும் பிரச்சினை இல்லாமல் மிக அழகாக, பிரமாண்டமாக நடத்திக் காட்டி உலக நாடுகளை மூக்கில் விரல் வைக்க வைத்து விட்டது தென் ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்க்க் கண்டத்தில் நடந்த முதலாவது உலக்க் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்ற பெருமையும் இப்போட்டிக்கு உண்டு. இந்த ஆண்டின் சரித்திர நிகழ்வுகளில் இந்தப் போட்டிக்கும் நிச்சயம் இடம் உண்டு.

10. டெல்லி காமன்வெல்த் விளையாட்டு – நடக்குமா, நடக்காதா என்பது ஒரு பக்கம் இருக்க, அரை குறையாக கட்டப்பட்டு வந்த ஸ்டேடியங்கள், குளறுபடிகள், ஊழல் புகார்கள் என பெருத்த சர்ச்சைக்குள்ளானது டெல்லி காமன்வெல்த் போட்டிகள். போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒருபக்கம் அறிவிக்க, கேம்ஸ் வில்லேஜில் வசதிகள் சரியில்லை, பாம்புகள் படையெடுக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் குவிய, கட்டிய நடைமேம்பாலம் சட்டென்று இடிந்து விழ இந்தியாவுக்கு பெரும் மானப் பிரச்சினையாகி விட்டது டெல்லி காமன்வெல்த் போட்டி. ஆனால் குறை சொன்ன அத்தனை பேரையும் இன்ப அதிர்ச்சிக்கள்ளாக்கும் வகையில் அட்டகாசமான தொடக்க விழா, அபாரமான இறுதி விழாவுடன் கலக்கலான முறையில் நடந்து முடிந்த்து காமன்வெல்த் போட்டி. அத்தோடு இல்லாமல், இந்தியாவுக்கும் 2வது இடத்தைக் கொடுத்து புதிய சாதனையையும் படைக்க வைத்து விட்டது.

5 கருத்துகள்:

  1. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
    http://sakthistudycentre.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. ஜெவின் தொடர் கூட்டங்கள் எல்லாம் காமெடி நியூஸ் அதை எல்லாம் லிஸ்டில் சேர்த்திருக்க தேவையில்லை...

    உலகக்கோப்பை கால்பந்து பற்றி அதிகம் பேர் எழுதவில்லை... நீங்கள் எழுதியது பிடித்திருந்தது...

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர்களே......நான் படித்ததை பகிர்ந்துள்ளேன்......

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....