10 ஜனவரி 2011

அதிர்ந்தது சேலம்....கூட்டணி பற்றி குழப்பிய விஜயகாந்த்...


இதுவரை தேமுதிக மாநாடு அல்லது கூட்டத்திற்கு இப்படி ஒரு மக்கள் கூட்டம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு நேற்றைய சேலம் மாநாடு அமைந்து விட்டது. அந்த அளவுக்கு பல லட்சம் பேர் திரண்டு வந்திருந்தனர்.

மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடந்த இந்த மாநாட்டையொட்டி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமையகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்தொலைவுக்கு பிளக்ஸ் பேனர்களை வைத்து அசத்தி விட்டனர் தேமுதிகவினர்.


திமுகவையும், திமுக ஆட்சியையும், திமுக தலைவர் கருணாநிதியையும், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேருவோமா, சேர்ந்தால் யாருடன் சேர்வோம் என்பது குறித்து யாருக்கும் புரியாத வகையில் படு குழப்பமாக பேசியுள்ளார் சேலத்தில் நேற்று நடந்த பிரமாண்டமான மாநில மாநாட்டில்.

தேமுதிக வரலாற்றில் நேற்றைய சேலம் மாநாடு மிகப் பெரியதாக அமைந்துள்ளது. பல லட்சம் பேர் திரண்டு வந்ததால் சேலமே குலுங்கிப் போனது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை பேர் திரண்டு வந்ததோடு, சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை பலஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு கட்சியினர் வைத்திருந்த பேனர்களும், புதிய சாதனை படைத்து விட்டன.

50 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தேமுதிக மாநாட்டு மேடையில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவித்தார்( ஹி ஹி காசா பணமா அள்ளி விட வேண்டியதுதானே..). அத்தனை பேர் வந்திருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவிட்டாலும் கூட சமீப காலத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் கூட்டங்களுக்கு வந்ததை விட பல மடங்கு கூட்டம் இங்கு திரண்டிருந்தது என்பது உண்மை.

இத்தனை பேரும் இப்படி படையெடுத்து வந்ததற்கு ஒரே காரணம்- தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவிக்கப் போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்புதான். இதை உறுதி செய்வது போலவே தேமுதிக நிர்வாகிகள் நேற்று மாநாட்டு மேடையில் கடுமையாக திமுகவைத் தாக்கிப் பேசினர்.

சரி, திமுகவுடன் கூட்டணி இல்லை, அப்படியானால் அதிமுகவுடன்தான் கூட்டணி என்ற எதிர்பார்ப்புக்குள் தேமுதிகவினர் போக ஆரம்பித்து விட்டனர். திமுகவையும், திமுக ஆட்சியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினர் நேற்றைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக நிர்வாகிகள்.

கடைசியாக விஜயகாந்த் பேச வந்தார் இரவு 9 மணியளவில். கேப்டன் தனது கூட்டணி குறித்த முடிவை வெளியிடப் போவதை ஆவலுடன் கேட்க தொண்டர்கள் தயாரானபோது நிறுத்தி, நிதானமாக, விலாவாரியாகப் பேச ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் அவரது பேச்சில் கூட்டணி குறித்து குறிப்பிடவில்லை. அதை அவரே சுட்டிக் காட்டி கடைசியாகப் பேசுகிறேன் என்றார். கூட்டத்தினரும் பொறுமையுடன் காத்திருந்தனர். இருந்தாலும் கடைசி வரை இவருடன்தான் கூட்டணி, இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை விஜயகாந்த் சொல்லவே இல்லை.

தனது பேச்சின்போது இடை இடையே, என்னாலும் வேகமாக, கோபமாகப் பேச முடியும். ஆனால் அப்படிப் பேசினால் நாக்கு தடுமாறும் என்பதால் அப்படிப் பேசாமல் பொறுமையாக, மெதுவாகப் பேசுகிறேன் என்றார் விஜயகாந்த். அதேசமயம், விஜயகாந்த் இப்படி மிக மிக நிதானமாக இதுவரை பேசியதே இல்லை என்று கூறும் அளவுக்கு மகா நிதானமாக ஒவ்வொரு பிரச்சினையாக போய்ப் போய் வந்தார். தனது பேச்சில் முதல்வர் கருணாநிதியைமிகக் காட்டமாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ஓநாய் என்று கூட கூறினார். பொய் பேசுபவர் என்றார், வரலாற்றை மாற்றிச் சொல்பவர் என்றார், ஊழலுக்குப் பொறுப்பாளி என்றார். அழகிரியையும் விடவில்லை, ஸ்டாலினையும் விடவில்லை. வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம் என்றார்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் நெளிய ஆரம்பித்ததைப் பார்த்த விஜயகாந்த், நாம் கூட்டணி வைக்க வேண்டுமா என்று ஜெயலலிதா ஸ்டைலில் தொண்டர்களைப் பார்த்துக் கேட்டார். கூட்டணி வேண்டும் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்க கிட்டத்தட்ட அத்தனை பேருமே கையை உயர்த்தி தங்களது இத்தனை கால விருப்பத்தை ஒரே குரலில் வெளிப்படுத்தினர். இதை விஜயகாந்த்தே எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று அவர் கூறியபோது கொஞ்சம் பேரே கைகளை உயர்த்தினர். இதையடுத்து அவர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, சட்டசபையில் இப்படி கேட்டு முடித்தவுடன் பெரும்பான்மையானோர் கைகளை உயர்த்தியதால் அதுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால் நான் அப்படிக் கூற மாட்டேன். மாறாக, உங்களையும், என்னையும், நமது கட்சியையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்று குழப்பமாக பதிலளித்து நிறுத்தினார்.

தனது பதில் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதை அவரே உணர்ந்தோ என்னவோ பேசி முடித்து விடை பெற்ற பிறகு மீண்டும் மைக்கைப் பிடித்து, கூட்டணி முடிவு குறித்து என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொண்டு விடை பெற்றார்.

மொத்தத்தில் நேற்று விஜயகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதே உண்மை. இதை கலைந்து சென்ற தொண்டர்களும் வெளிப்படுத்தினர். கேப்டன், தெளிவாச் சொல்லாம விட்டுட்டாரே என்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது. ஆனாலும் கூட்டணிக்கு தொண்டர்கள் ஆதரவாக இருப்பதை அவர் உணர்ந்து வி்ட்டார். எனவே கண்டிப்பாக கூட்டணி வரும் என்று அவர்கள் ஆறுதல்பட்டுக் கலைந்து சென்றனர்.

9 கருத்துகள்:

  1. அந்தாளு தெளிவாவே பேசமாட்டார் போல....இவரெல்லாம் முதல்வரானால் நாட்டுக்கு பெருங்கேடு.

    பதிலளிநீக்கு
  2. நேற்று நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் ஒன்னும் புரியவில்லை

    இன்னும் நல்ல தகவல்களை கூறி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. Updated News,எப்ப பதிவு போடரீங்ன்னு தெரியமாட்டேங்குது நண்பரே...அண்ணன் கலாஸி மாதிரி Mail Connect குடுங்க தலைவா..

    பதிலளிநீக்கு
  4. கூட்டணி யா? வரும் ஆனா வராது ...

    பதிலளிநீக்கு
  5. @ NKS.ஹாஜா மைதீன்
    // நீங்கள் எழுதும் பதிவுகள் எனது டேஷ்போர்டில் தெரிவதில்லை...என்னவென்று தெரியவில்லை... //

    அப்படியா... ஒருமுறை எனது வலைப்பூவினை unfollow செய்துவிட்டு மறுபடி follow செய்யவும்...

    பதிலளிநீக்கு
  6. @ NKS.ஹாஜா மைதீன்
    // நீங்கள் எழுதும் பதிவுகள் எனது டேஷ்போர்டில் தெரிவதில்லை...என்னவென்று தெரியவில்லை... //

    அப்படியா... ஒருமுறை எனது வலைப்பூவினை unfollow செய்துவிட்டு மறுபடி follow செய்யவும்...

    பதிலளிநீக்கு
  7. ஆளாளுக்கு காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ;)

    பதிலளிநீக்கு
  8. கேப்டனுக்கு வந்த மொத்த கூட்டம் என்ன ?

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....